Friday, July 17, 2009

நம்பிக்கை...


என் உள்ளத்தின் ஆழத்தில்
உறங்கிக் கிடக்கின்றன
பல கனவுகள்.

உயிரின் அடி ஆழத்தில்
ஏக்கம் என்னும் நதி
பெருக்கெடுத்தோடுகின்றது.

எதையோ தொலைத்து
எதையோ தேடியபடி
வீதிகளின் ஓரங்களில்
விரைவுப் பயணங்கள்

விதியின் விளையாட்டால்
வீணாகும் என் வாழ்நாட்களை
எவரால் மீட்க முடியும்?

வாழும் நாட்கள்
தருகின்ற வலியை
யாரால் தாங்கமுடியும்?

எப்பொழுதும்
வானத்தை நோக்கியபடியே
வாசம் செய்கின்றேன்

என் சிறகுகள்
உடைந்து போனாலும்
நினைவுகள் ஏனோ
உயரவே பறக்கின்றன.

விழிகளைத் திறந்தபடிதான்
தூங்குகின்றேன்
விழி மூடும் பொழுதெல்லாம்
விழித்திருக்கின்றேன்

எனக்கும் சிறகுகள் முளைக்கும்
என்ற நம்பிக்கையில்
புதைந்து கிடந்தாலும்
புதையலாகவே கிடக்கின்றேன்...

No comments:

Post a Comment

PAKEE Creation