Sunday, December 6, 2020

தேடல்களும் தேர்வுகளும் தானே வாழ்க்கை...




வெகுநாட்களாய்
தேடிக்கொண்டிருக்கிறேன்
தொலைந்து போன ஏதோ ஒன்றை

தேடல்கள்
அதிகரித்ததாலோ ஏனோ
மறந்தே போனது
எதை தொலைத்தேன்?
இதோ !
எனது தேடல்களும்
தொடர்ந்த வண்ணமே

மேகத்துள் மறைந்த நீர்த்துளி
கால் நழுவி பூமியில் விழுந்து
தொலைந்து போனதே!
அதையா தேடுகிறேன்

அல்லது,
பெளர்ணமி அன்று நிலவு
மறைந்து போனதே
அதையா தேடுகிறேன்?

கண்விழித்த போது
கனவு கலைந்து போனதே
அதைத்தான் தேடுகிறேனோ?

கைக்கொடுக்க வந்த உறவுகள்
கைநழுவிப்போனதே
அதைத்தானோ?

நிலாச் சோறுண்டு
நித்தம் மகிழ்ந்த அந்த
நிஷ்களங்கமான
குழந்தைப் பருவத்தையோ?

தாயின் மடியில்
தலை சாய்த்து அமைதி கண்ட
பள்ளிப் பருவத்தையோ?

தெரியவில்லை!

தேடல்கள்
அதிகரித்ததாலோ ஏனோ
மறந்தே போனது
எதைத் தேடுகிறேன்

இருப்பினும் எனது
தேடல்கள் தொடர்கின்றன

தேடல்களும்
தேர்வுகளும் தானே வாழ்க்கை...

ரணங்கள்...




பல்வேறு வகையான ரணங்கள் தான்
ஆபரணங்களாக வந்து என் வாழ்வில்
பல தடவை மாலை அணிவித்தது
என் விதியை எண்ணி
இந்த உலகத்தையே
மறந்துவிட நினைத்தேன்

தேன்பூச்சி கொட்டிவிட்ட
தோரணையில்
என் இனிய நினைவுகள்
ஒவ்வொன்றாய் அறுந்து விழுந்தன

முன்னேற்றப் பாதையை
நோக்கிப் பல தடவை
நான் எடுத்துக்கொண்ட
அத்தனை உபாயங்களும்
அர்த்தமற்ற உத்திகளாயின...

எதிரி களைக்கும் வரை...



எழுந்து வா ஆழ வேரோடு கிளைகள் பரப்பு
தளிர்கள் தளைத்து தலை நிமிர்த்து
தலை மீது இன்னும் ஒரு இடி இறங்கலாம்
கிளைகள் முறியலாம் இலைகள் உதிரலாம்
சளைத்து விடாதே
உனக்கென்றோரு உரமான மண்
உன்னிடம் இருக்கும் வரை
மீண்டும் துளிர் விடு ஆழவேரோடு
மீண்டும் மீண்டும்
எதிரி களைக்கும் வரை...

தன்னம்பிக்கை...



பார்த்த அளவில் பதறாதே
பயந்து பயந்து சாகாதே
நேர்த்தியாக நெஞ்சை நிமிர்த்து
நினைத்த செயலில் மனதைச் செலுத்து
முடியாது என்று தயங்காதே
முனைய முன்னே மயங்காதே
உன்னை உனக்கே தெரியவில்லை
உன் திறமை உனக்கே புரியவில்லை
காற்றினை அணைத்துப்பார் - அதன்
வேகத்தைக் கணித்துப் பார்
ஆற்றினைச் சற்றுப்பார் - அதன்
தொழில்களை உற்றுப்பார்
நெருப்பினை அணுகிப்பார் - அதன்
சக்தியின் தணலைப்பார்
இவை இயற்கை சக்திகள்
நீயும் இயற்கையின் ஒரு படைப்பு
உனக்குள்ளும் சக்தி ஒன்று
உறங்கிக் கிடக்கிறது
எப்பொழுது நீ அதனை நீ உணர்கிறாயோ
அப்பொழுது அது விழித்துகொள்ளும்
அந்த விழிப்பில்
உன்னை உனக்கே தெரியும்
உன் திறமை உனக்கே புரியும்
அப்பொழுது நீ உன்னை நம்புவாய்
நம்பிக்கை யாவற்றிலும் மேலானது
தன்னம்பிக்கையே
தன்னம்பிக்கை உள்ளவர்க்குத்
தரணியெல்லாம் அடிபணியும்
இல்லை அது என்று சொன்னால்
கல்வி என்ன செல்வம் என்ன
தலையெடுக்க முடியாது...

வாழ்க்கையை இறுகப் பற்றிக்கொள்...



இது என்ன வாழ்க்கை
வாழ்க்கைப் பிடிப்புக்கள்
வலுவிழந்தனவா
காயங்கள்தான் ஆறினவா
கண்ணீர்தான் முடிந்ததுவா
இனி அழுதால்
இரத்தம்தான் வருமா
இல்லை
வாழ்க்கை உன்னை
வாழ வழிசெய்கின்றது
வாழ்ந்து பார்
விடியும் பொழுதில்
வருகின்றது சூரியன்
வரும் இன்பமும் துன்பமும்
வருகின்ற வரையில் வரும்
வருவதும் போவதும் நியதி
நீ
வாழ்க்கையை
இறுகப் பற்றிக்கொள்...

விடைகளோடு பிறந்திட வேண்டும்...



பசியினால் பட்டினி கிடந்து
மாண்டுபோன மனிதங்கள்
பிணி பிடித்து
பிரிந்து சென்ற உயிர்கள்
கோரக்குண்டுகள் பாய்ந்து
மடிந்து மண்ணறையடைந்த ஜீவங்கள்
இயற்கையின் பாய்ச்சலினால்
இறந்து போன இதயங்கள்
எல்லாவற்றினதும்
நினைவுகள் மீட்கப்பட்டன
முடிந்துபோன பொழுதுகளில்
அத்தனை துயரங்களும் கலைந்து போய்
அகிலத்தின்
அனைத்து மனித தேடல்களுக்கும்
விடைகளோடு பிறந்திட வேண்டும்...

இந்த உலகம் போதாதென்றொரு வெறியில்...



ஆண்களும் பெண்களுமாய்
நடமாடிக்கொண்டு திரிகிறார்கள்
மனிதம் இல்லாத உடம்புகளோடு
கொம்புகள் முளைக்காத
விலங்குகள் மாதிரி
கால்களினால் மட்டும்
வித்தியாசப் பட்டுக்கொண்டு
இந்த உலகம்
போதாதென்றொரு வெறியில்...

எனது கண்ணீரின் அர்த்தத்தை...

 


முட்களில் வாழ்ந்து
முட்களினால் படரப்பட்டு
முட்களினால் பாதுகாக்கப்பட்ட நான்
கள்ளியின் மேல் பூத்திருக்கும்
பூப் போன்றவன்
நான்கு சுவர்கள் சொல்லும்
என் தனிமை பற்றி
தனிமையின் துயரம் பற்றி
வாழ்தலின் வெறுமை பற்றி
எனது குளியலறை சொல்லும்
எனது கண்ணீரின் அர்த்தத்தை...

யாரோ ஒருவர்தான்...




குண்டு வெடிப்பில் குதறப்பட்டவர்
யாரோ ஒருவர்தான்
குண்டு துளைத்துக் குருதியில் கிடந்தவர்
யாரோ ஒருவர்தான்
கண்ணி வெடியில் கொல்லப்பட்டவர்
யாரோ ஒருவர்தான்
கடத்தப்பட்டுக் காணாமல் போனவர்
யாரோ ஒருவர்தான்
எரிந்தவிந்த டயருக்குள் எலும்பாய்க்
கிடந்தவரும்
பாதி கருகிப் பாதையில் கிடந்தவரும்
யாரோ ஒருவர்தான்
யாரோ ஒருவர்
தெருவில் சிதிலமாய்க் கிடக்கிறாரென
யாரோ ஒருவர் உன்னைச் சொல்வதற்குள்
சுதாகரித்துக்கொள்...

உன் முன்னால் வருவதற்கு



உன் முன்னால் வருவதற்கு
நான் துணியாத நாட்களில்
நிழல் போலத்தான் தொடர்த்திருக்கிறேன்
அப்போதெல்லாம் உன் கூந்தலில்தான்
என் மனம் கூடுகட்டியிருந்தது
உன் கூந்தல் அசைந்தபோதெல்லாம்
என் மனதும் இசைந்து ஆடியது
நீ எனக்குள் போதை ஊற்றினாய்
உனக்குத் தெரியாமலே...

Friday, May 29, 2020

சிறகுகளை தரித்துவை சூரியன் வரை உயர பறப்போம்...




எனது கிரணங்களுக்கு
உன் இதயத்தில்
பாதைகளை உருவாக்கு
நடந்து திரிவதற்கல்ல
நிலைத்து நிற்பதற்கு

என்
இமைச்சிறகுகள் படபடக்க
உனக்குள் ஒரு வானத்தை எழுப்பு

சிரித்து மயக்கும்
உன் கன்னக்குழியில்
நான் நடந்து போக
ஒரு பாலம் போடு

உன் மெளன வளையங்களுக்குள்
சேகரிக்கும் பரிமாணங்களை
அரியாசனத்தில் அமரச்செய்

உன் உதடுகளில்
பூசி மெழுகும் புன்னகையை
நிர்வணமாய் வெளித்தள்ளு

உன் திருமுகத் திருவிழாவில்
பல்லவியை ஒரம் கட்டி
புது அகராதி எழுது

பவனி வரும் பனிக்காற்றை
உன் சுவாசத்தில்
பந்தி போட்டு பத்திரப்படுத்தி வை

உன் விழிகளைச் சுற்றி
இமைகளால் பரண் கட்டாதே
என் பார்வை பரிதவிக்கும்

என் கனவுகளுக்கு
நீ புதிய அறிமுகம்
உன் கருவறைச் சுவரில்
நான் கவிதை எழுத வேண்டும்

பிரியங்களை பலப்படுத்து
உன் நெஞ்சினில் சிறகுகளை தரித்துவை
உச்சிச் சூரியன் வரை உயர பறப்போம்...

காதல் செய்யும் விசிந்திரம்...



வலை என்று தெரிந்துவிட்டால்
எந்த விலங்கும் தானாகச் சென்று
மாட்டிக்கொள்ளாது
வலை என்று தெரிந்த பின்னர்தான்
மனம் அதில் விழுவதற்கு
விலையெதற்கும் தயாராகிறது
காதல் மந்திரம்
செய்யும் விசிந்திரம் அது...

ஆனால்... மனிதர்கள்..?



கடலை முத்தமிடும் தொடுவானம் என்று
இளமையில் கற்பனை செய்யப்பட்ட வானம்.
எப்போதும்போல்
தொடாத கடலை தொட்டுவிட்டதுபோல் பாவனை
காட்டிக்கொண்டு எட்டாத தொலைவில்
சரிந்து கிடக்கிறது.

கரையைத்தொடும் அலைகளைக் காணோம்.
இரக்கமற்ற மனிதர்கள் இதயத்தைத்
திறந்து காட்டினாற்போல்
கற்களும் பாசியுமாய்க் கோலம்காட்டும்
கடலின் முற்றம்.

சற்றுத் தொலைவில் கரைக்கும்
தொடுவானத்துக்கும் இடையே சத்தமின்றிப்
புரளும் அலைகள்.

மறுபடியும் அலைகள் கரையத்தேடிவரும்
கடலின் நிலப்பரப்பைக் கண்ணுக்குத்
தெரியவிடமால் குளிர்ந்த நீரால் சுகம்
விசாரித்து கரையை முத்தமிட்டு
மறுபடியும் திரும்பிப்போகும்
இயற்கை இன்னும் மாறவில்லை.

ஆனால்... மனிதர்கள்..?
தன்னத்தனியே நின்று சூழலை நோக்குகையில்
தவித்துப் போகிறது மனது...

Thursday, May 28, 2020

நிரந்தரமாய் தங்க அல்ல...



ஒன்றும் கொண்டு வரமாட்டேன் என்று
கைகளை இறுக்கி மூடியபடி பிறக்கும் குழந்தை

மனிதன் ஒன்றையும் எடுத்துச் செல்லமாட்டேன்
என்று விரல்களை விரித்தபடி

கடைசிப் பயணத்தை தொடர்கிறான்
உலகத்தில் உள்ளதெல்லாம் உலகத்துக்காகவே
இங்கு வந்துபோகமட்டும் உயிர்களுக்கு
உரிமை உண்டு
நிரந்தரமாய் தங்க அல்ல...

காதலி நீ என்னோடிருந்தால்...


காதலி நீ என்னோடிருந்தால்
நிலவைப் பெயர்த்து
உன் முகத்திற்கு
மஞ்சள் பூசுவேன்
மின்னும் தாரகை எடுத்து
உந்தன்
சேலைக்கு
வண்ணந்தீட்டுவேன்
வான நீலத்தை உறிஞ்சி
உந்தன் விழிக்குள் விட்டு
அழகு பார்ப்பேன்
வளைந்த மேகத்தை பிடித்துப்
உந்தன் தேகத்தில்
ஒட்டிவைப்பேன்
சுட்டெரிக்கும் சூரியனை
தொட்டெடுத்து
உந்தன் கூந்தலுக்குள்
செருகி படம் பிடிப்பேன்
விலகிச் செல்லும்
நிழலைப் பிடித்து
உனக்கு குடை பிடிப்பேன்...

திருப்தியற்ற மனது...




அம்மாவின் முலையைச் சப்பிச்சப்பி
உறிஞ்சிய பால் ஜீரணித்து இரத்தமாகி
இளைஞனாகி
மார்புநிமிர்ந்த பெண்மையில் மயங்கி
மார்புதைந்து
பாலும் பழமும் பவளவாயும் என்று ருசித்து ருசித்து
அன்னை முலை தந்த அப்பாலில் தொடங்கி
இறுதி நேரத்தில் புகட்டப்படும் இப்பால் வரையில்
எத்தனை பால்..?
ஆண்பால் பெண்பாலாய் பாலியல் படித்து
திருப்தியாயிற்றா மனது..?
இல்லையே...

எந்தக் காலத்தில் வாழ்கிறோம்..?



எந்தக் காலத்தில்
வாழ்கிறோம்?
நெருப்பைத் தின்று
உஷ்ணங்களை
ஏப்பமாய்விடும் காலம்
ஒன்றிலா?
எச்சரிக்கை நினைவுகளும்
இருட்டடிப்புக்களும்
எங்கள் மூளையை
உரசும்
ஒரு
இறுகியா காலத்தின்
ஓரத்திலா..?

வாழ்ந்த காலங்கள்...


அன்னை மடிதனில்
தலை சாய்ந்த நாள்தனையும்
நிலாக் காட்டி அன்னமூட்டிய
ஆனந்த காலங்களையும்
அழகாக எண்ணுகிறேன்

ஆலயம் தொழ
அழகாகச் சென்ற
அரிய பக்தி நாட்களையும்
ஆனந்தமாய் ஆடி ஓடிய
ஆவேச நாட்களையும்
ஆர்ப்பரித்து எண்ணுகிறேன்
அங்காடி வேளையில்
ஆனந்தமானந்தமாய்
ஊரளந்த ஊதாரித் தனத்தையும்
உற்று நோக்குகிறேன் இன்னும்

நரகத்தில் நாமிங்கு
சொகுசாக வாழ்ந்தாலும்
அங்கு சொந்தங்கள் கூடி
சொற்பணமாய் வாழ்ந்த காலங்களை
சொல்லியெடுக்க முடியுமா..?

உன் வரவு...




வசந்தங்கள் பாடும்
வைகறை ஓரத்தில்
உன் வரவுக்காக
விழி வைத்துக் காத்திருந்தேன்

வந்தது வசந்தமா?
என் வருங்காலமா
புரியவில்லை எனக்கு
நீ வந்த வரவு

வானத்தை கிழித்து
வானவில் வந்தது போல
வானளவு வியக்க வைத்தது
உன் வசந்த வரவு...

காயங்கள் காயவில்லையடி...



மெலிந்த ஒட்டகையின்
பயணத்திலும் - மணற்
புயலின் வலியிலும் - இங்கே
தணலாய்த் தகிக்கும்
வெய்யிலிலும் கூட - என்
காதல் காயங்கள்
காயவில்லையடி...

Wednesday, May 27, 2020

மாறும் மாறும் எல்லாம் மாறும்...



மாறும் மாறும் எல்லாம் மாறும்
பணமேது தேடும்
நிலையது மாறும்
ஓய்வாய் உட்கார்ந்து
கதைக்க முடியும்
உண்ணும் போது
சிரிக்க முடியும்
விரும்பிய மட்டும்
உறங்க முடியும்
குழந்தைகளுடனே
குலாவ முடியும்
குடும்பமாய் கூடிக்
களிக்க முடியும்
பட்டியல் நீளும்
முடியும் முடியும்
எல்லாம் முடியும்
இலவாய் நினைவுகள்
காய்த்துக் குலுங்க
கிளியாய் மனமும்
காத்து நிற்கும்...

சுமைகள் சுதந்திரத்திற்கான சூத்திரங்கள்...


ஏதோ ஒன்றை
சுமந்து கொண்டுதான்
இங்கே நம்முடன்
பயணங்கள் பயணிக்கின்றன
சுமைகள் சுதந்திரத்திற்கான
சூத்திரங்கள்
பார்த்த மாத்திரத்தில் கனிகளை
பறிக்க இயலாது
சுமக்க கற்றுக்கொள்
சுமக்க தெரிந்தவர்கள்
சுமக்கிறார்கள்
சாதனைகளை...

கள்ளினும் காமம் இனிது...


உள்ளே போனால்
தானே மது வெறிக்கும்
உண்டால்தானே
மது மயக்கும்
ஆனால்- நினைக்கவே
வெறிக்கிறதே இது
என்ன மயக்கம்?
"இதன் பெயர்தான் இன்ப மயக்கம்
நினைத்ததும் இனிக்கும்
காம மயக்கம்,
உண்ணும் கள்ளும்
ஈடாகாத
இன்ப மயக்கம்"
"உள்ளினும் தீராய்
பெருமகிழ செய்தலால்
கள்ளினும் காமம் இனிது"...

காதலின் சக்தி


காதலின் சக்தி எதிலே தெரியுமா?
எண்ணிக் கொண்டே இருக்கும்போது
எண்ணியவரே எதிரே வந்து நிற்கும் வியப்பிலே.
மனது அனுப்பி தகவல் கொடுக்கிறதோ?
"நினைவுகளே தந்திகள்
நினைவுகளே தபால்கள்
நினைவுகளே புறாக்கள்
காற்றில் பறந்து சென்று
காதல் தூது சென்று
கைபிடித்து இழுத்து வருகின்றன".
களைத்து வந்தவரை எப்படி கவனிப்பாய்?
"நெஞ்சுக் கூட்டுக்குள்
இழுத்தணைத்து பூட்டிக் கொள்வேன்
கொஞ்சும் இதழினாள்
கொவ்வைப் பழம் கொடுப்பேன்"
கைகள் தாளமிட
கால்கள் கலந்தாட
தோள்கள் சுதிசேர
பாலும் பழமாகி
தேனும் சுவையாகி
தேகம் சதிர் ஆடும்...

என்றுமே உனக்கு நான்...


என் கவிதை எனும்
அதி அற்புதமான படைப்புக்கு
உன் உருவமே சாட்சி
என் கவிதையில் இந்த உலகம்
மிக இனிமையாக இருந்தாலும்
அதில் அழகாக தோன்றுவது உன் முகம் தான்
ஒத்த பின்னலும்
பூப்போட்ட பாவடையும் சட்டையுமாய்
வட்ட முகத்தில் சிவந்த பொட்டுடன்
சிரிப்போடு போட்ட விதைதான்
இந்தக் கவிதைகள்
இந்த ஊமைக்குயிலை
கவிக்குயிலாக்கிய என் உயிரே
என்றுமே உனக்கு நான்
காதல் காணிக்கை தான்...

நான் நானாக இல்லை...



நெஞ்சில் ஆசைவந்தபோது
கையில் பொருள் இல்லை;
கையில் பொருள் வந்தபோது
நெஞ்சில் ஆசை இல்லை;
வயிற்றில் பசிவந்தபோது
கையில் உணவு இல்லை;
கையில் உணவு வந்தபோது
வயிற்றில் பசி இல்லை;
எழுத நினைத்தபோது
நெஞ்சில் சிந்தனை இல்லை;
நெஞ்சில் சிந்தனை வந்தபோது
எழுத நேரம் இல்லை;
மனதில் காதல் வந்தபோது
காதலிக்கும் ஒருத்தி இல்லை;
காதலிக்க ஒருத்தி வந்தபோது
மனதில் காதல் இல்லை;
நாடு, அதை நாடும்போது
இன்று எனக்கு நாடு இல்லை;
நாடு எனை நாடும்போது
அன்று நான் இவ்வுலகில் இல்லை;
இல்லை இல்லை என்பதனால்
நான் நானாக இல்லை...

துணிவு இருக்க வேண்டும்...



மற்றவர்களுடைய தவறுகளைச்
சொல்வது ஆச்சரியமான விடயம்
ஒன்றும் இல்லை
உன்னுடைய தவறுகளையும் திரும்பிப் பார்க்கின்ற துணிவு
உனக்கும் இருக்க வேண்டும்...

கல்யாணச் சந்தை...



உலகப் படத்தை விரி
தரையால், வானத்தால்
கடலால்
எப்பிடியாயினும்
வெளிநாடு செல்லும்
சுலபமான வழியைக் கண்டுபிடி

விலை பேசு
சோதனை
அதிகமில்லாத கடவுச்சீட்டு
எந்த நாடாயிருப்பினும் விலை பேசு

வெளிநாட்டில் மண்ணில் கால் பதித்தால் போதும்
கல்யாணச் சந்தையில்
அதிக விலை போய் விடுவோம்...

பூமியைச் சுவாசிக்க...


தனது உடமைகளை
நெஞ்சோடு சேர்த்து
பாதுகாக்கும் குழந்தைபோல்
உன் கைகளுக்குள்
இறுகியிருக்கும் என் வாழ்க்கை

சற்றே கைகளைத் தளர விடு
நான் இந்த பூமியைச் சுவாசிக்க...

Tuesday, May 26, 2020

வாடி மூர்க்கமாய் காதல் கொள்வோம்...



வாடி மூர்க்கமாய் காதல் கொள்வோம்
உன்னையும் என்னையும்
உரசி நெருப்பெடுத்து
குலக்காப்புக் கொள்கை எரிப்போம்

பின்னேரங்களில்
சாயும் சூரியனுக்கு
விடியல் பற்றி விமர்சிப்போம்
விதையாகிப் போன நம்
வீரரின் கல்லறை காட்டி
அமாவாசை இரவுகளை அகற்றுவோம்
வாடி மூர்க்கமாய் காதல் கொள்வோம்...

என்னவள்...


வீட்டுக்கு திரும்பும்
ஒவ்வொரு பொழுதுகளிலும்
சந்தோசம் தருகிறது
நீ காத்திருக்கக் கூடும்
எனும் பிரம்மை...
PAKEE Creation