Thursday, July 21, 2011

என் சிரிப்பை மட்டும் திருப்பிக்கொடு...


ஒவ்வொரு முறையும்

மறக்கத்தான் நினைக்கிறேன்

கன்னங்களில் வழியும் கண்ணீரை

துடைத்த பின்…

காதலை எந்த

வடிவில் கண்டாலும்

மறுபடியும் கண்ணீர்

வருவதை ஏன் என்னால்

தடுக்க முடிவதில்லை?

மெமரி கார்டில்

என்னை அழித்துவிட்டாய்

என் மெமரியை

என்ன செய்ய முடிந்தது உன்னால்?

யாருக்கெல்லாமோ கால் செய்தேன்

உனக்கு மட்டுமே காதல் செய்தேன்.

கால் கொண்டு எட்டி உதைத்தாய்

அட, எட்டி உதைத்தாலும்

உன்னிலே ஒட்டிக்கொள்ளும்

ஒட்டுண்ணியாய்

வேடிக்கை காட்டுகிறது பார் என் காதல்.

நீ வாழ தொடங்கிவிட்டாய்

உன் வாழ்க்கையை..

அதில் தவறேதும் இல்லை

என் வாழ்க்கையையை

ஏன் என்னிடம் தர மறுக்கிறாய்?

எடுத்துக்கொள் என்று

இயல்பாக சொல்கிறாய்.

வர மாட்டேன் என

அடம்பிடிக்கும் இதயத்தை

சிலுவையிலா அறைய முடியும்?

அதுவும் சரிதான்.

நேற்று என் இதயத்தை

சிறையில் வைத்தாய்

இன்று சிலுவையில்....

எப்போதும் இல்லாமல்

விழித்திரை இப்போதெல்லாம்

அதிகநேரம் வேலை செய்கிறது.

தூக்கத்தை விடவும்

துடிப்பதைதான் அவைகள் அதிகம்

விரும்புகின்றன போலும்.

கண்ணில் விழுந்த தூசியை

முன்பெல்லாம் ஊதி எடுத்தாய்.

இப்போதெல்லாம் ஊசி கொண்டு

எடுக்கிறாய்..

உணவைக்கூட

இதழிலிருந்து இதழிற்கு

தடம் மாற்றினாய்.

ஏன் உணர்வை மட்டும்

மறுத்து விட்டாய்?

எத்தனை காதல் கடந்து வந்தாலும்

உன் இதயம் மட்டும்தான்

என் காதலுக்கான தாஜ்மகால்.

அங்கே எனக்கு

பள்ளியறை வேண்டாம்

கல்லறையாவது

கட்டிக்கொள்ள அனுமதி கொடு

இறக்கவும் விடவில்லை

இருக்கவும் விடவில்லை

என்னதான் வேண்டுமாம்

உன் நினைவுகளுக்கு?

நான் கொடுத்த எல்லாவற்றையும்

திருப்பி கொடுத்தாய்...

ஒன்றைத்தவிர..

அதை மட்டுமாவது

திருப்பிக் கொடுத்துவிடு.

திருப்பிக்கூட தரவேண்டாம்

ஒரே ஒரு முறை

கண்ணிலாவது காட்டிப்போ..

நீண்டநாள் ஆகிவிட்டது அதைப்பார்த்து..

ஆம். அனைவரும்

என்னிடம் கேட்கிறார்கள்.

தயவுசெய்து

தவணை முறையிலாவது

எனக்கு காட்டு

என் சிரிப்பை.

No comments:

Post a Comment

PAKEE Creation