
ஒரு
பரவச தேசத்தின்
பளிங்கு மாளிகை போல்
பரிசுத்தமானது
உன் புன்னகை.
அது
இரவை உடைக்கும்
ஓர்
மின்னல் கோடு போல
தூய்மையானது
தேவதைக் கனவுகளுடன்
தூக்கத்தில் சிரிக்கும்
ஓர்
மழலைப் புன்னகையுடனும்
ஒப்பிடலாம்
உன் புன்னகையை.
எனக்குள் கவிழ்ந்து வீழும்
ஓர்
பூக்கூடை போல
சிதறுகிறது உன் சிரிப்பு.
ஒரு மின்மினியை
ரசிக்கும்
இரவு நேர யாத்திரீகனாய்
உன்
புன்னகையை நேசிக்கிறேன்.
ஆதாமுக்கு
ஆண்டவன் கொடுத்த
சுவாசம் போல
எனக்குள் சில்லிடுகிறது
உன் புன்னகை.
எனினும்
உன் புன்னகை அழகென்று
உன்னிடம் சொல்ல
மட்டும்
ஆயுள் கால தயக்கம் எனக்கு.
நீ
புன்னகைப்பதை
நிறுத்தி விடுவாயோ என்று...


No comments:
Post a Comment